ஆண்மைக் குறைவுக்கு தீர்வு...!! சித்தா்கள் கூறியவை.



ஆண்மைக் குறைவு பற்றிப் பெரிதான அறிமுகம் தேவையில்லை என நினைக்கிறேன். உடலியல் ரீதியான ஏற்படும் இந்தப் பின்னடைவுகள் உருவாக்கிடும் உளவியல் சிதைவானது பல குடும்பங்களின் அவதிக்கும், அழிவுக்கும் காரணமாகி விடுகிறது.

ஹார்மோன் குறைபாடுகள் மற்றும் வாழ்வியல் சூழல் காரணங்களினால் உருவாகிடும் இந்த பிரச்சினைகளைப் பற்றி நம்மிடையே போதுமான விழிப்புணர்வு இல்லை. இதனால் பாதிப்புக்கு உள்ளாவர்கள், தங்களுக்கு ஏற்படும் இயல்பான தயக்கம் மற்றும் கூச்சம் காரணமாய் முறையான வைத்திய சிகிச்சையை எடுத்துக் கொள்ள முன் வருவதில்லை. இதனைப் பயன் படுத்திக் கொண்டு பல போலி வைத்தியர்கள் பொய்யான நம்பிக்கையை  தூண்டிவிட்டு, பாதிப்புக்கு உள்ளானவர்களிடம் இருந்து பணத்தை கறந்து விடுவது காலம் காலமாய் தொடர்கிறது.

ஆண்மைக் குறைவை இரண்டு பெரும் பிரிவுகளில் அடக்கிவிடலாம். ஒன்று விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருத்தல், மற்றது உறவில் நாட்டமின்மை அல்லது இயலாமை என்பதாகும். இதற்கு நவீன மருத்துவம் அநேக தீர்வுகளை முன் வைக்கிறது. எனினும் இவை யாவும் செலவு பிடிக்கும் வைத்திய முறைகள். மேலும் இதற்கான பலனும் தொடர் சிகிச்சையின் மூலமே சாத்தியமாகும்.

ஆண்மைக் குறைவினை நிவர்த்தி செய்யும் பல வழி முறைகளை நமது சித்தர் பெருமக்கள் அருளி இருக்கின்றனர். மிகவும் எளிதான இந்த முறைகள் நல்ல பலனைத் தரக்கூடியவை என்றும் கூறியிருக்கின்றனர். அந்த வகையில் புலிப்பாணிச் சித்தர் அருளிய புலிப்பாணி ஜாலதிரட்டு என்னும் நூலில் கூறப் பட்டிருக்கும் ஒரு முறையினை இன்று பார்ப்போம்.

பாராப்பா சந்தனமுந் தேற்றான வித்தும்
         பண்பான பூமிசர்க் கரையின் மூலஞ்
சேரப்பா பூனையென்ற காலி வித்துஞ்
         செயலான முருங்கை வேர்ப்பட்டை கூட்டி
கூறப்பா வகைவகைக்கு விராகன் ரெண்டு
          கொற்றவனே தானரைத்து தேங்காய் பாலின்
தீரப்பா சீனி சர்க்கரையும் போட்டுத்
           திறமாகக் குடிப்பாயீ ராறு நாளாமே.


ஆமடா குடித்துவரத் தாது புஷ்டி
            அப்பனே வீரியந்தான் விளையும் போது
தாமடா சூடுகள்தான் தணியும் பாரு 
             தளதளப்பாய் தேகமது காந்தி யுண்டாம்
வாமடா மங்கையரைப் புணர்ந்தா யானால்
             வளமான மான்மதனோ விவனென் பார்கள்
தாமடா போகருட காடாட்சத் தாலே
              நலமாகப் புலிப்பாணி பாடினானே.

சந்தனம், தேற்றான் கொட்டை, பூமிசர்க்கரைக் கிழங்கு, பூனைகாலி வித்து, முருங்கை வேர்ப்பட்டை என இவை ஒவ்வொன்றிலும் இரண்டு வராகன் எடை வீதம் எடுத்து கல்வத்தில் இட்டு, தேங்காய்ப் பால் ஊற்றி அரைத்தெடுக்க வேண்டுமாம். இதனுடன் அளவாக சீனிச் சர்க்கரையை சேர்த்து பன்னிரெண்டு நாட்கள் குடித்து வந்தால் தாது புஷ்டி ஏற்பட்டு வீரியம் உண்டாகும் என்கிறார். இதனால் உடலின் சூடு தணிவதுடன், தேகம் பொலிவாகுமாம். மேலும் இத்தகைவரைச் சேரும் பெண்கள் இவன் மன்மதனோ என வியந்து போவார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

இந்த வைத்திய முறையின் பலனாக விந்தணு எண்ணிக்கை அதிகரிப்பதுடன், உறவில் நாட்டமும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது. இந்தச் சரக்குகள் எல்லாம் எந்த ஒரு நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கக் கூடியவை. இதில் குறிப்பிடப் படும் சீனிச் சர்க்கரை எதுவெனத் தெரியவில்லை. தேவை உள்ளவர்கள் அனுபவம் வாய்ந்த சித்த மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இதனைப் பயன் படுத்தி பலன் பெறலாம்.

நன்றி - சித்தர்கள் இராச்சியம்

1 comments:

ரொம்ப நல்லா இருக்குங்க உங்க தளம்.
உங்கள் பதிலை எழுதினால் எனக்கு உற்சாகமா
இருக்கும்
சீனி, ssetex@gmail.com

Reply