திருமணங்கள் இப்போது கோலாகலம், கொண்டாட்டங்கள் நிறைந்ததாக மாறி இருக்கிறது. திருமண ஆடம்பரத்தால், வாழ்க்கையில் இணையும் அந்த ஜோடிகளுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது.
ஒவ்வொரு திருமண நிகழ்விலும் கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், அதில் இருவருடைய வாழ்க்கை மட்டுமல்ல, இரு குடும்பத்தின் நிம்மதியும் அடங்கி இருக்கிறது. அதனால் திருமணத்தில் ஒருபோதும் அவசரம் காட்டக்கூடாது. பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும் அவர்களை பற்றிய தெளிவான உண்மையான தகவல்களை முதலில் திரட்டவேண்டும். அந்த தகவல்கள் உண்மையானதா என்று உறுதி செய்யவேண்டும். படிப்பு, சொத்து, சுதந்திரம், அந்தஸ்து போன்ற அனைத்திற்கும் மேலாக ஒழுக்கம் வாழ்க்கையில் இணையும் இருவரிடமும் இருக்கவேண்டும். இருவரின் மனநிலையும் நன்றாக அமைந்திருக்கவேண்டும்.
`வெளிநாட்டிலிருந்து பையன் வந்திருக்கிறான். இன்னும் ஒரு வாரத்தில் திருமணம்’ என்று சிலர் சொல்ல கேட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட அவசர திருமணங்களின்போது, அவர்களுக்கு சொந்த பந்தங்களை அழைக்ககூட நேரமிருக்காது. வேக, வேகமாக திருமணத்தை முடித்து, பெண்ணை வழியனுப்பிய பிறகு தான் பல விஷயங்களை யோசிப்பார்கள். எங்கேயோ தவறு நடந்திருப்பது அப்போது தான் அவர்களுக்கு புரியும்.
ஏமாற்று பேர்வழிகளுக்கு இந்த அவசர திருமணங்கள் ஒரு நல்ல வாய்ப்பு. தங்களைப் பற்றி கேள்வி கேட்க அவகாசம் கொடுக்காமல் மற்றவர்கள் சிந்தனையை மழுங்கடித்து காரியத்தை சாதித்து கொள்வார்கள்.
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஆர்த்திக்கு 28 வயது. படித்தவள். அழகானவள். ராணுவத்தில் பணிபுரியும் ஒரு உயர் அதிகாரிக்கென்று பெண் பார்க்க வந்தார்கள். ஆள் பார்க்க கம்பீரமாக இருந்தார். அவரோடு உறவினர்களாக சிலரும் வந்தார்கள். அவர் பெண்ணைப் பார்த்தார். இருவரும் பேசினார்கள். இருவருக்கும் பிடித்து விட்டது. அவசர அவசரமாக திருமணமும் முடிந்து விட்டது. அவர் தன்னுடைய முகவரியை கொடுத்து விட்டு பிறகு வந்து பெண்ணை அழைத்து போவதாக வாக்களித்து விட்டு போனவர் போனவர்தான்.
அவருடைய பெயரையும், ஆபீசர்ஸ் மெஸ் முகவரியையும் வைத்து கொண்டு அங்கே சென்று விசாரணை செய்தனர். அப்போதுதான் அவர் ராணுவ அதிகாரி அல்ல, ஆபீசர்ஸ் மெஸ்சின் சமையல்காரர் என்பது தெரிந்தது. உண்மையை சொன்னால் அந்த அழகான பெண் கிடைக்காதே என்று கருதி தன்னை ஒரு உயர் அதிகாரி என்று கூறிவந்திருக்கிறார். அவருடைய ராணுவ பகுதி முகவரியும் அந்த பொய்க்கு கை கொடுத்தது. அவருக்கு ஒரு வாரம் மட்டுமே விடுமுறை கிடைத்திருந்ததால் சீக்கிரமாக திருமணத்தை முடித்து விட வேண்டும் என்று அவசரப்படுத்தி இருக்கிறார். அவசரமாய் நடந்த திருமணம் என்றாலும், நடந்தது நடந்தது தானே.
எப்படியாவது நம் வேலை முடிந்தால் சரி என்று நினைப்பவர்களுக்கு இந்த அவசரம் அல்வா சாப்பிடுவது மாதிரி. அதன் விளைவுகளை பற்றி யோசிக்கவே தோன்றாது. ஏற்கெனவே இரண்டு முறை திருமணம் செய்து கொண்டவன் மூன்றாவதாக ஒரு பெண்ணை பார்த்து திருமணத்திற்கு நாள் குறித்து அவசர அவசரமாக தாலி கட்டும் நேரத்தில் போலீசிடம் பிடிபட்டான். இரண்டு கல்யாணத்தை மறைக்கவும், மூன்றாவது கல்யாணத்தை நடத்தவும் இவனுக்கு பெண் வீட்டாரின் அவசரம்தான் கை கொடுத்தது.
இது போன்ற பல அவசர திருமணங்கள் கண்ணீர்விட வைத்திருக்கின்றன. தொழிலதிபர் ஒருவர் தன் மகளுக்கு அவசரமாக திருமணத்தை நடத்தி, மணமக்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு நிம்மதியாக பெருமூச்சு விட்டார். இந்த அவசர கல்யாணத்திற்கு அவர் சொன்ன காரணம் தான் பெரிய தொழில் அதிபர் என்பதால் பொறுமையாக எதையும் செய்ய போதுமான அவகாசம் இல்லை என்பது தான்.
மகளுக்கு பெரிய இடத்தில் திருமணத்தை முடித்த நிம்மதியில் பேப்பரை புரட்டிய அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. “இந்த புகைப்படத்தில் உள்ளவரை பார்க்க நேர்ந்தால் கீழ்க்கண்ட முகவரிக்கு தகவல் கொடுக்கவும். இவர் ஏற்கனவே பல பெண்களை திருமணம் செய்து கொண்டவர். யாரும் இவரிடம் ஏமாற வேண்டாம்” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த அவசர தொழில் அதிபருக்கு தலை சுற்றியது. தன்னுடைய அவசரத்தால் தன் மகளின் வாழ்க்கை அலங்கோலம் ஆகிவிட்டதே என்று புலம்பிக்கொண்டிருந்தார்.
பெங்களூரில் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஸ்ரீகாந்த் பெற்றோர் தனக்காக நிச்சயம் செய்து வைத்திருந்த பெண்ணை வேண்டாம் என்று நிராகரித்து விட்டு அவசர, அவசரமாக தன்னுடன் வேலை பார்க்கும் நண்பனுடைய சகோதரியை திருமணம் செய்து கொண்டான். நல்ல அழகுடன், ஆஸ்தியுடன் வசதியான பெண் என்பதால் அம்மா, அப்பாவும் மனசாட்சியை தூக்கி போட்டு விட்டு, தன் மகனுடைய கல்யாணத்தை அட்சதை போட்டு ஆசிர்வாதம் செய்து விட்டு வந்தார்கள்.
உற்றார், உறவுகள் திகைத்து போய் நின்றிருந்தபோது தான் அந்த அதிர்ச்சி செய்தி வந்தது. பெண்ணுக்கு இதய கோளாறு என்று தெரிந்து கொண்டனர். உடனே பெண் வீட்டிற்கு ஆக்ரோஷமாக புறப்பட்டார்கள். “கொஞ்சம் காலமாவது என் மகள் சந்தோஷமா வாழட்டுமேன்னு தான் அவளுக்கு கல்யாணம் பண்ணிவச்சேன். பெண்ணிற்கு அப்பா செய்யவேண்டிய கடமைதானே இது. என் இடத்தில் நீங்க இருந்தாலும் இதைத்தானே செய்திருப்பீங்க..” என்று பெண்ணின் தந்தை அமைதியாக பதில் சொன்னார். அவசரத்திற்கு கிடைத்த பரிசு, யாரை குறை சொல்ல முடியும்?இப்படி எல்லா அவசர கல்யாணங் களுக்கு பின்பும் ஆயிரம் அல்லல்கள் இருக்கும்.


