
“என் பையனை தலையணை மந்திரம் போட்டு மயக்கிட்டா” என மாமியார்கள் புலம்புவதும், “அவனை முந்தானைல முடிஞ்சுட்டா” என பெண்கள் கிண்டலடிப்பதும் வெகு சகஜம். தாம்பத்யத்தின் தேவையை ஒருவகையில் இந்த வாசகங்களெல்லாம் திரும்பத் திரும்ப உறுதிப் படுத்திக் கொண்டிருக்கின்றன. தாம்பத்யம் உயிர்ப்பாக இருக்கும் காலமெல்லாம் தம்பதியருக்கு ஹனிமூன் காலம் தான். அந்த ஏரியா வீக் ஆகும்போது குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள் வந்து குவியும். மன அழுத்தத்தை விரட்டும் ஒரு அசத்தலான விஷயம் செக்ஸ் என்கின்றனர் உளவியலார்கள்.
மணிமேகலையின் கையிலிருக்கும் அமுத சுரபிபோல செக்ஸ் வாழ்க்கை எப்போதும் வற்றாத விஷயமாய் இருப்பதில்லை என்பது தான் சிக்கல். ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்த விஷயத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள் உண்டு. குறிப்பாக ஆண்களுக்கு என்ன தான் “விருப்பம்” இருந்தாலும் உடல் ஒத்துழைக்காவிட்டால் தோல்வி தான். ஆண்மைக் குறைவு பல்வேறு காரணங்களில் இருக்கலாம். நோய், மன அழுத்தம், உடல் குறைபாடு, விருப்பமின்மை இப்படி ஏதோ ஒன்று !
இதை வெளியே சொல்வது அவமானம் என பெரும்பாலான ஆண்கள் நினைக்கிறார்கள். “வாலிப வயோதிக அன்பர்களே” என்று தெருக்கடை முனை முதல் தொலைக்காட்சித் திரை வரை கேட்கும் குரல்களுக்கு மூலதனமே இந்தப் பயம் தான். ஆண்மைக் குறைவு சிக்கலைச் சரிசெய்ய ஏகப்பட்ட வழி வகைகள் உண்டு. ரத்தினச் சுருக்கமாய்ச் சொல்ல வேண்டுமென்றால், “இரத்த ஓட்டத்தை தேவையான இடத்தில் பாயச் செய்து விட்டால்” பிரச்சினை தீர்ந்தது ! அந்த வேலையைச் செய்யும் ஆயிரத்து சொச்சம் மருந்துகளில் இன்றைக்கு முதலிடம் வயாகராவுக்கு !
ஆண்களுக்கு வயாகரா ? அப்படின்னா பெண்களுக்கு ? இப்படி சிந்தித்த மக்கள் தான் இன்று பணம் சம்பாதிக்க தலையைப் பிய்த்துக் கொள்கிறார்கள். பெண்களைப் பொறுத்தவரை உடல் சார்ந்த குறைபாடு விகிதம் ரொம்பவே குறைவு. பெரும்பாலும் மனம் தான் ! நிம்மதியான வாழ்க்கையோ, குடும்ப சூழலோ இல்லாவிட்டால் அவர்களால் தாம்பத்யத்தில் முழுமையாக ஈடுபட முடியாது. ஆனால் அதையெல்லாம் தாண்டித் தான் இன்றைக்கு பெரும்பாலான பெண்களின் பாலியல் நதி ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த “விருப்பம்” எனும் விஷயத்தைத் தான் மருந்து தயாரிப்பாளர்கள் கையில் எடுத்திருக்கிறார்கள். பெண்களுக்கு செக்ஸ் ஆசையைத் தூண்டும் மருந்துகளைத் தயாரிக்கிறேன் பேர்வழி என ஏகப்பட்ட பேர் பிசினஸ் களத்தில் இறங்கிவிட்டார்கள். அவர்கள் சமீபத்தில் சுடச்சுட அறிவித்த பெயர் பிளிபான்செரின். இந்த மருந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் காலமெல்லாம் ஹனிமூன் தான் என ஏகப்பட்ட பில்டப் கொடுத்தார்கள். ஆனால் கடைசி நேரத்தில் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. தீர ஆய்வு செய்த எஃப்.டி.ஏ இந்த மருந்தை நிராகரித்து விட்டது. பக்கா விளைவு தரும் என எதிர்பார்க்கப் பட்ட மருந்தில் ஏகப்பட்ட பக்க விளைவுகளாம்.
முதலில் பெண்களுக்கான செக்ஸ் மருந்தையும் “இரத்த ஓட்டத்தை” அந்த 
உலக அளவில் எடுக்கப்பட்ட முடிவுகள் சொல்வது ஆச்சரியமளிக்கிறது. சுமார் 40 சதவீதம் பெண்கள் பாலியல் ஆர்வமே இல்லாமல் இருக்கிறார்கள். அல்லது கடலளவு இருக்க வேண்டிய ஆர்வம் சிறு டம்ளர் அளவுக்கே இருக்கிறது. எனவே, ஒருவகையில் பெண்களின் விருப்பத்தை அதிகரிப்பது அவர்களுடைய தாம்பத்ய வாழ்க்கையை வலுவாக்கும்.
செக்ஸ் ஆர்வத்தைத் தூண்டுவது என்பதே தப்பான சிந்தனை என்கிறார் டாக்டர் லெனோர் டிஃபர். நியூயார்க் மருத்துவக் கல்லூரியின் உளவியல் நிபுணர் இவர். மக்கள் மக்களோடு தான் ஆர்வம் கொள்ளவேண்டுமே தவிர செக்ஸ் ஆர்வத்தை வலுக்கட்டாயமாகத் தூண்டக் கூடாது. ஒருவேளை மருந்து சாப்பிட்டு செக்ஸ் கிடைத்தே ஆகவேண்டும் என பெண்ணின் மனம் தூண்டப்பட்டால் அது வேறு விளைவுகளையும் ஏற்படுத்தலாமல்லவா ? அப்படி ஒரு மருந்து இருந்தால் அது ஆண்களுக்கு வசதியாகிவிடக் கூடும். பெண்ணுடன் உறவை அந்த மருந்தின் மூலம் ஆண்கள் நிறைவேற்றக் கூடும். எனும் அவருடைய பயத்தில் நியாயம் இல்லாமலில்லை.
செக்ஸ் ஆராய்ச்சியாளரான கனடாவின் ரோஸ்மெரி பாஸன் என்பவரும் இந்த விஷயத்தை எதிர்க்கிறார். பாலியல் ஆர்வம் என்பது தனிநபர் சார்ந்தது. அன்றைய பொழுது எப்படி இருந்தது ? அலுவல் எப்படி இருந்தது ? கணவனின் நடவடிக்கைகள் எப்படி இருந்தது என்பதெல்லாம் தான் பெண்ணின் ஆர்வத்தை நிர்ணயிக்கின்றன. “பெண்ணின் விருப்பமென்பது ஸ்டவ் அடுப்பு அல்ல. தேவைப்படும் போது பற்ற வைத்துக் கொள்ள,” என காட்டமாகவே சுடுகிறார் அவர்.
எல்லா பெண்களுக்கு செக்ஸ் ஆர்வம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு இருக்க வேண்டும். அது எப்போதுமே இருக்க வேண்டும். என்பதெல்லாம் ஒருவகையில் தவறான அனுமானங்கள். எந்த அளவு சரியான அளவு என்று சொல்ல முடியுமா ? என இந்த மருந்துக்கு எதிரான விமர்சனங்களும் லாஜிக் மீறாமல் தான் ஒலிக்கின்றன.
பெண்களுக்கான மருந்தை எப்படியேனும் கொண்டு வந்தே தீருவேன் என மருந்து கம்பெனிகள் மூக்கால் உழுவதற்கு ஒரே ஒரு காரணம் தான். பணம் ! வயாகரா எனும் ஒரு மாத்திரையைக் கொண்டே உச்சத்துக்குப் போய்விட்ட ஃபைசர் போல, பெண்களுக்கான ஒரு மருந்து கிடைத்தால் போதும் உச்சத்துக்கு போய்விடலாம் என கனவு காண்கின்றன நிறுவனங்கள். ஆனால் அவர்களின் பெரும்பாலானவர்கள் உண்மையான சிக்கலைச் சரிசெய்யும் முயற்சியில் இறங்கவில்லையோ என்று தான் யோசிக்கத் தோன்றுகிறது. அஸ்திவாரத்தை விட்டு விட்டு ஏழாவது மாடி கட்ட ஆசைப்படும் நிலையே பல நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளிலும் தெரிகின்றன.

